சைவம்

Punjabi Lobia Masala Recipe in Tamil | பஞ்சாபி ஸ்டைல் காராமணி மசாலா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பஞ்சாபி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் காராமணி இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான பஞ்சாபி ஸ்டைல் காராமணி மசாலா செய்யுங்கள். இந்த காராமணி மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* காராமணி – 1 கப்

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 2 டீஸ்பூன்

* பட்டை – 1/4 இன்ச்

* கிராம்பு – 1

மசாலாப் பொடிகள்:

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் காராமணியை நீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் ஊற வைத்துள்ள காராமணியை போட்டு கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி குக்கரை மூடி மிதமான தீயில் 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சிறிது காராமணியை மட்டும் எடுத்து, கரண்டியால் மசித்து, கிரேவியில் சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பஞ்சாபி ஸ்டைல் காராமணி மசாலா தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக பஞ்சாபி ஸ்டைல் காராமணி மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பஞ்சாபி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment